Labels:

எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் சேர்ந்து விட்டதா? இணையதளத்தில் அறிய ஏற்பாடு

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்கள், தங்களது விண்ணப்பம் சேர்ந்து விட்டதா என்பதை அறிய மருத்துவக் கல்வி தேர்வுக் குழு ஏற்பாடு செய்துள்ளது.


www.tnhealth.org என்ற சுகாதாரத் துறையின் இணையதளத்தில் இதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ். விண்ணப்ப எண் அல்லது பிளஸ் 2 தேர்வு எண்ணை இணையதளத்தில் பூர்த்தி செய்து, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு விண்ணப்பம் சென்று சேர்ந்து விட்டதை மாணவர்கள் உறுதிசெய்து கொள்ள முடியும் என்றார் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு செயலர் டாக்டர் ஆர்.ஜி. சுகுமார்.

10,000 மாணவர்கள்: சென்னை உள்பட 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 1,823 எம்.பி.பி.எஸ். இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 836 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 85 பி.டி.எஸ். இடங்கள், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 909 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களில் சேர இந்த ஆண்டு மொத்தம் 29,050 மாணவர்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ளனர்.

விண்ணப்பம் சேர்ந்து விட்டதை மாணவர்கள் உறுதி செய்து கொள்ள வசதியாக, இதுவரை 10,000 மாணவர்களின் விண்ணப்பம் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்னும் 4 நாள்களில் அனைத்து 29,050 விண்ணப்பங்களும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு விடும். எனவே மாணவர் யாருக்காவது விண்ணப்பம் சென்று சேர்ந்து விட்டது உடனடியாக உறுதியாகவில்லை எனில், பதற்றம் அடைய வேண்டாம் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கலந்தாய்வு எப்போது? எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். விண்ணப்ப தகவல் குறிப்பேட்டில் குறிப்பிட்டுள்ளபடி ஜூன் முதல் வாரத்திலிருந்து இரண்டாவது வாரத்துக்குள் ரேண்டம் எண்-ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். எம்.பி.பி.எஸ். முதல்கட்ட கலந்தாய்வு வருகிற ஜூன் 18-ஆம் தேதி தொடங்கும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஆர்.ஜி.சுகுமார் தெரிவித்தார்.

0 comments :

Post a Comment