ஐ.டி. இளைஞர்களை அதிகமாகப் பயமுறுத்திய வார்த்தை இது!
ஒரு சில மாதங்களிலேயே உச்சத்துக்குக் கொண்டுசென்று வாழ்வின் பல வசதிகளை அனுபவிக்கக் கொடுத்த 'சாஃப்ட்வேர் கம்பெனி' வேலை 'ஜெயன்ட் வீல் சவாரி'போல சரேலென்று தரையில் வீழ்ந்ததற்குக் காரணம்... ரெசஷன். சடாரென்று சரிவது மட்டுமல்ல; திடுதிடுப்பென்று துள்ளி எழுவதும் ஐ.டி. துறையின் அடையாளம்!
'கீழே விழுந்தால் எழுந்திருக்க சிரமப்பட நான் யானை இல்லை; சட்டுனு மண்ணை உதறிட்டு எந்திரிக்கிற குதிரை!' என்று ரஜினி ஒருமுறை தன்னைப்பற்றிக் குறிப்பிட்டார். அந்தத் தகுதி ஐ.டி. துறை வேலைகளுக்கும் பொருந்தும். இத்தனைக்கும் அடிப்படைக் கட்டமைப்பு காரணமாக உலகப் பொருளாதாரத் தேக்கம் அப்படி ஒன்றும் நம் நாட்டு வேலை வாய்ப்புகளை அடைத்துவிடவில்லை. மாறாக, அதிகரிக்கத்தான் செய்திருக்கின்றன.
'அப்போ... நிறையப் பேரை வேலையைவிட்டுத் தூக்குனாங்களே... அதுக்கு என்ன காரணம்?' என்று உள்ளுக்குள் ஒரு குரல் ஒலிக்கலாம். ஆம்... தூக்கினார்கள், துரத்தி அடித் தார்கள், 'பிங்க் ஸ்லிப்'பினார்கள். ஆனால் யாரை? அந்தச் சமயத்தில் போதிய திறன்கள் இல்லாமல், நேரத்தையும் வளங்களையும் வீணாக்கிக்கொண்டு இருந்தவர்களை வெளியே அனுப்பினார்கள். கையில் இருக்கும் நிதி போதாது என்ற சமயத்தில், இன்னும் செலவழித்து அவர்களுக்கு எதற்காகப் பயிற்சி அளிக்க வேண்டும் என்று நினைத்து வெளியே அனுப்பினார்கள். அதை மேலாண்மை மொழியில், 'காஸ்ட் கட்டிங்' என்பார்கள். அப்போது திறமையாக உழைத்துக்கொண்டு இருந்தவர்களுக்கு இப்போது புரொமோஷன், சம்பள உயர்வுகள் அளிக்கப்பட்டு இருக்கின்றன. சரி, இப்போது ரெசஷன் சுனாமி ஓய்ந்துவிட்டதா?
உலகப் பொருளாதாரச் சரிவுக்குப் பிறகு, ஐ.டி. துறை வேலைவாய்ப்புகள் பிரகாசம் அடைந்து உள்ளன என்பது சர்க்கரைச் செய்தி. அடுத்த ஆறு மாதங்களுக்குள் சுமார் ஒரு லட்சம் பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக ஐ.டி. நிறுவன மனிதவளத் துறையினர் படபடக் கின்றனர். 'ஃப்ரெஷ்ஷர்' ஆக இருந்தாலும், அனுபவசாலியாக இருந்தாலும், இந்தச் சூழ்நிலையை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது..?
டிப்ஸ் தருகிறார்கள் அனுபவஸ்தர்கள்.
"பொதுவாக, 44 சதவிகித நிறுவனங்கள் தங்களுக்கு வரும் விண்ணப்பங்கள் தகுதியற்ற நபர்களிடம் இருந்து வருவதாகத் தெரிவிக்கின்றன. ஒன்று, நிறுவனங்களுக்குத் தேவையான நபர்கள் வேறு துறைகளில் இருக்கிறார்கள் அல்லது தங்களுக்குப் பொருந்தி வராத துறையில் இளைஞர்கள் மல்லுக் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த இரண்டையும் இணைத்தால், வேலைவாய்ப்புகள் சமமாக இருக்கும்.
விண்ணப்பதாரர்கள் எதிர்பார்க்கும் சம்பளத்தைக் காட்டிலும் அதிகமாகத் தரவும் பல நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. பொருளாதார நெருக்கடி சூழலில், பணியாற்றிக்கொண்டு இருக்கும் வேலையைவிட்டால், அதற்கு இணையான இன்னொரு வேலையைத் தேட குறைந்தபட்சம் நான்கு முதல் ஐந்து மாதங்கள் தேவைப்பட்டது. ஆனால், இப்போது அதிகபட்சம் மூன்று வாரங்களிலேயே வேறு வேலை கிடைத்துவிடும் என்பதால், எந்த ஒரு நிறுவனமும் தன் பணியாளர்கள் மனதில் அந்த எண்ணமே ஏற்படாத வகையில் பரிவு காட்டி நடத்துகிறார்கள். இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. இருக்கும் பணியாளரைப் போகச் சொல்லிவிட்டு, மீண்டும் புதிதாக ஒரு பணியாளரைத் தேர்ந்து எடுத்து, அவர்களுக்குப் பயிற்சி அளித்து, அவர்களை நியமிப்பது வரையிலான நடவடிக்கைகள் நிறையச் செலவுகள் பிடிப்பதாக இருக்கும். அந்தச் செலவையும் நேர விரயத்தையும் தவிர்க்கவே அனைத்து நிறுவனங்களும் நினைக்கின்றன. எந்தப் பெரிய பல்கலைக்கழகத்தில் படித்துச் சென்றாலும், மென்பொருள் நிறுவனங்களில் 'என்ட்ரி லெவல்' ஆகத்தான் வேலைக்குச் செல்ல முடியும். அங்கு முதலில் உங்களை 'unlearn' செய்வார்கள். பின்பு, அவர்களுக்குத் தேவையானபடி உங்களுக்குப் பயிற்சிகள் அளித்து 'relearn' செய்யவைப்பார்கள். சாஃப்ட்வேர் துறையைப் பொறுத்தவரை 'அப்டேட்' திறமை மிகவும் அவசியம், அதிமுக்கியம்!
நெருக்கடி சூழலில் பல நிறுவனங்கள் தாங்கள் மேற்கொண்ட புராஜெக்ட்களை பட்ஜெட் பத்தாது என்ற காரணத்துக்காக நிறுத்திவைத்தன. தற்போது வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்க ஆரம்பித்து இருப்பதால், அந்த வேலைகளை மீண்டும் தொடங்கி இருக்கிறார்கள். அவற்றைச் செய்து முடிக்கத் தொழிலாளர்கள் தேவை என்பதால், இனி எங்கும் 'ஆட்கள் தேவை'!" என்று முடிக்கிறார் பிரபு.
படித்த இளைஞர்களை நாம் நான்கு வகையாகப் பிரிக்கலாம். அதாவது, வேலையில் இருப்போர், வேலை இல்லாதோர், வேலைக்குச் செல்லாதோர், வேலைக்குத் தகுதி இல்லாதோர். இதில் நான்காவது பிரிவினருக்கு முறையான பயிற்சிகள் அளிப்பதன் மூலம் அவர்களின் உழைப்பாற்றலையும் பயனுள்ளதாக்கலாம். இன்றைக்குப் பெரும்பாலான நிறுவனங்களில் 'அறிவுப் பணியாளர்கள்' (Knowledge Workers) தான் அதிகமாகத் தேவைப்படுகிறார்கள். அதனால், உயர் பதவிகளை அடைய கடும் போட்டிகளைச் சந்தித்தாக வேண்டும். அதற்கு நிறைய உழைக்க வேண்டும். முன்பு, மேலாளர் பதவியை அடையக் குறைந்தது 20 ஆண்டுகளாவது பணி அனுபவம் இருக்க வேண்டும். இப்போது அப்படி இல்லை. நான்கு முதல் ஐந்து வருடங்களில் ஒருவர் மேலாளராக வந்துவிட முடியும். வழிநடத்துகிற திறன்களும், குழுவாக இணைந்து செயலாற்றுகிற மனப்பான்மையும் இருந்தால், தலைமைப் பதவிகள் உங்களை நோக்கி வரும்.
பொருளாதாரம் சரிவடைந்து, தற்போது மீண்டு எழுகிற இந்தச் சமயத்தில், இந்த வேலைக்குத்தான் செல்வேன் என்று வருடக்கணக்காகக் காத்திருக்காமல், முதலில் எந்த வேலை கிடைக்கிறதோ... அதில் சேர்ந்துவிடுங்கள். அதில் பணியாற்றிக்கொண்டே உங்களுக்குப் பிடித்த வேலை அல்லது, நீங்கள் விரும்புகிற வேலைக்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டு இருங்கள். ஏனென்றால், தனியாக ஒன்றுமே இல்லாமல் செல்வதைக் காட்டிலும், சக ஊழியர்களுடன் சேர்ந்து பணியாற்றிய அனுபவத்துடன் ஒரு நிறுவனத்தின் படி களை அடைவது நல்லதுதானே!" என்று ஆலோசனை தருகிறார் ராமன்.
'தனக்கு வேலை கிடைக்குமா என்பதுபற்றி ஒருவன் கவலைப்படத் தேவை இல்லை. தான் தேர்ந்தெடுத்த துறையில் தன்னைத் தகுதிப்படுத்திக்கொண்டே இருப்பவனுக்கு வாய்ப்புகள் கதவைத் தட்டிக்கொண்டே இருக்கும்!' என்ற தாமஸ் ஜெஃபர்சனின் வரிகளின் அர்த்தம் புரிந்தவர்தானே நீங்கள்?!
நடைமுறை மாற்றம்! ![]() ![]() ![]() ![]() ![]() |
பொறியியல் பட்டதாரிகள் கவனத்துக்கு...





0 comments :
Post a Comment