Labels:

ஸ்டான்லி மருத்துவ கல்லூரி எம்.பி.பி.எஸ்., இடங்கள் 250 ஆக அதிகரிப்பு

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின், எம்.பி.பி.எஸ்., இடங்களை, 250 ஆக உயர்த்திக் கொள்ள, இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.,) அனுமதி அளித்து உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள, 18 அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்த எம்.பி.பி.எஸ்., இடங்கள், 2,245 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில், தலா, 50 எம்.பி.பி.எஸ்., இடங்களை அதிகரித்துக் கொள்ள, கடந்த ஆண்டு, எம்.சி.ஐ., அனுமதி அளித்தது. 
இந்நிலையில், 2013 - 14ம் கல்வியாண்டில், சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் தற்போது உள்ள முறையே, 165, 150 இடங்களை, தலா, 250 ஆக உயர்த்திக் கொள்ள, மருத்துவக் கல்வி இயக்ககம், எம்.சி.ஐ.,யிடம் அனுமதி கோரியது.
இதுதொடர்பாக, கடந்த மார்ச் இறுதியில், எம்.சி.ஐ., குழு, இக்கல்லூரிகளில் ஆய்வு மேற்கொண்டது. அதன்படி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் தற்போதுள்ள, 150 எம்.பி.பி.எஸ்., இடங்களை, 250 ஆக உயர்த்திக் கொள்ள, எம்.சி.ஐ., அனுமதி வழங்கி உள்ளது.
தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் உள்ள, 18 அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்த எம்.பி.பி.எஸ்., இடங்கள், 2,245 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில், 15 சதவீதம், அகில இந்திய ஒதுக்கீடு போக, மீதமுள்ள, 1,908 இடங்கள், 11 தனியார் மருத்துவக் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீடாக உள்ள, 838 இடங்கள் என, மொத்தம், 2,746 எம்.பி.பி.எஸ்., இடங்கள், வரும், 18ம் தேதி துவங்கும், முதல் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் நிரப்பப்பட உள்ளன.
சென்னை மருத்துவக் கல்லூரியின், எம்.பி.பி.எஸ்., இடங்களை, 250 ஆக உயர்த்திக் கொள்ள அனுமதி அளிக்காதது குறித்தும், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி செயல்பட ஒப்புதல் வழங்காதது குறித்தும், எம்.சி.ஐ., இணைய தளத்தில் தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

0 comments :

Post a Comment